

ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல்துறை டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உ.த்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அதன்தொடர்ச்சியாக அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி அபிராமபுரம் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ், இதே கோரிக்கையை வலியுறுத்தியும் வருங்காலங்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, காவல்துறை டிஜிபி ,அபிராமபுரம் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்