Last Updated : 08 Feb, 2020 12:33 PM

 

Published : 08 Feb 2020 12:33 PM
Last Updated : 08 Feb 2020 12:33 PM

நடிகர் விஜய்யை படியவைக்க முயல்கிறதா பாஜக? யார் அந்த 'ப'? யார் அந்த 'உ'?- இரா.முத்தரசன் அடுக்கடுக்காக கேள்வி

வருமான வரித் துறை ரெய்டு மூலம் நடிகர் விஜய்யை படியவைக்க பாஜக முயல்கிறதா என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 3 நாட்கள் நடந்த வருமானவரித் துறை ரெய்டில் அடிபடும் 'ப' எழுத்தில் தொடங்கும் அரசியல் பிரபலமும், 'உ' எழுத்தில் தொடங்கும் அரசியல் பிரபலமும் யார் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படம் பிரம்மாண்ட வெற்றியடைந்தது. அந்தப்படத்தின் வசூல் ரூ.300 கோடி எனக்கூறப்பட்ட நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்ஸியர் உள்ளிட்டோர் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், மாஸ்டர் படத்துக்காக நெய்வேலியில் படபிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த வருமான வரித்துறையினர் அவரை சென்னை அழைத்து வந்தனர்.

விஜய் வீட்டில் நடந்த ரெய்டு முடிந்த நிலையில் அவர் நேற்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆனால், அங்கே பாஜகவினர் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வருமான வரித்துறை ரெய்டு குறித்து இரா.முத்தரசன் இன்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவிக்கையில், "வருமான வரித் துறை ரெய்டு மூலம் நடிகர் விஜய்யை படியவைக்க பாஜக முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அது நடக்குமா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது.

ஏனென்றால், ஒரு படத்துக்கு ரூ.100 கோடி ரூ.150 கோடி எல்லாம் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படும் ஒரு நடிகரின் வருமான வரி தொடர்பாகவும் அவர் தனது பணத்தை வட்டிக்குவிடுவது தொடர்பாகவும் சில சர்ச்சைகள் எழுகிறது. அந்த நடிகர் அடுத்த நாளே குடியுரிமை திருத்தச் சட்டத்தை, தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஆதரிக்கிறார். அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வருகிறது.

ஆனால், நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்புத் தளத்திலும் தகராறு செய்கின்றனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது விஜய் பாஜக படியவைக்க முயல்கிறதோ எனத் தோன்றுகிறது. படப்பிடிப்புத் தளத்தில் பாஜகவினர் ரகளை செய்தது கடும் கண்டனத்துக்குரியது.

யார் அந்த 'ப'? யார் அந்த 'உ'?

அதேபோல், திரைப்படத் துறையினருக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் மதுரை அன்புச்செழியனிடத்தில் இருப்பது தமிழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் 'ப' எழுத்தில் தொடங்கும் முக்கிய அரசியல் பிரமுகர் மற்றும் 'உ' எழுத்தில் தொடங்கும் பிரமுகரின் பணம் எனக் கூறப்படுகிறது. வருமானவரித் துறை நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதற்காக அல்லாமல் உண்மையிலேயே ரெய்டு நடத்தியிருந்தால் யார் அந்த ப? யார் அந்த உ? எனக் கூற வேண்டாமா?" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x