Published : 07 Feb 2020 08:35 AM
Last Updated : 07 Feb 2020 08:35 AM

ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸார் தீவிர சோதனை: சீலை உடைத்து உள்ளே சென்றனர்

போலீஸார் நேற்று சோதனை நடத்திய சென்னை மந்தைவெளியில் உள்ள முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜியின் வீடு. படம்: ம.பிரபு

சென்னை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூட்டிய வீட்டின் சீலை உடைத்து உள்ளே சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 8 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர்.

அதிமுக ஆட்சியில் கடந்த 2011 முதல் 2016 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. பின்னர் திமுகவில் இணைந்த இவர், தற்போது அரவக்குறிச்சி எம்எல்ஏவாக உள்ளார். அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் இவர் ரூ.1.62 கோடி வரை வாங்கியதாகவும், ஆனால் வேலை வாங்கித் தரவில்லை என்றும் புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் மோசடியில் தொடர்புடையதாக சந்தேகப்படும் சிலரது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 31-ம் தேதி சோதனை நடத்தினர். சென்னையில் 9 இடங்கள்,கரூரில் 5 இடங்கள், திருவண்ணாமலையில் 2 இடங்கள், கும்பகோணத்தில் ஒரு இடம் என பலஇடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது லேப்டாப், பென்டிரைவ், மெமரி கார்டு, சொத்து ஆவணங்கள், வங்கி காசோலை புத்தகங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், இருப்பு பெட்டக சாவிகள் கைப்பற்றப்பட்டன.

அப்போது, சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெரு விரிவாக்கத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு பூட்டியிருந்தது. அந்த வீட்டுக்கு போலீஸார் சீல் வைத்தனர். அங்கு சோதனை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறும், இல்லாவிட்டால் பூட்டை உடைத்து சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவித்து செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், வீட்டை சோதனை செய்ய தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து, அந்த வீட்டுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று காலை சென்றனர். ஏற்கெனவே வைக்கப்பட்ட சீலை உடைத்து உள்ளே சென்ற போலீஸார் காலை 10 முதல் மாலை6 மணி வரை தீவிர சோதனை நடத்தினர். இதில் சில ஆவணங்களை போலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், அதுபற்றிய தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x