ரஜினி பேச்சு: தெரியாத விஷயங்கள் குறித்து மவுனமாக இருப்பதுதான் மரியாதை; தமிமுன் அன்சாரி

தமிமுன் அன்சாரி: கோப்புப்படம்
தமிமுன் அன்சாரி: கோப்புப்படம்
Updated on
2 min read

தெரியாத விஷயங்கள் குறித்து மவுனமாக இருப்பது தான் மரியாதை என, ரஜினி பேச்சு குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்.5) தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நான் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் அவர்களுடைய சுய லாபத்துக்காக போராட்டங்களைத் தூண்டி விடுகின்றன. இதற்கு மதகுருக்களும் துணை போகிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஜினி பேச்சு குறித்து, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தமிமுன் அன்சாரி, "கந்துவட்டி உள்ளிட்ட சட்ட விரோத தொழில்களை ரஜினி செய்வதாக குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில், இதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக, மத்திய பாஜக அரசை திருப்திப்படுத்துவதற்காக இப்படிப் பேசி வருகிறாரோ, என்று நாங்கள் சந்தேகம் கொள்கிறோம்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்டங்கள் குறித்து ரஜினிக்குப் போதிய ஆழமான பார்வை இல்லை. சிஏஏ சட்டத்தில் மதப்பாகுபாடு காட்டப்படுகிறது என நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். இலங்கைத் தமிழர்களையும் பாதிக்கிறது. என்ஆர்சி, என்பிஆர் சட்டங்கள் முஸ்லிம்களை மட்டுமல்ல அனைத்து மதத்தினரையும் பாதிக்கும், அதற்கு உதாரணம் அசாம்.

ரஜினிகாந்தின் முன்னோர்களின் ஆவணங்களைக் கேட்டால், அவற்றைக் காட்டத் தயாராக இருக்கிறாரா? அந்த ஆவணங்கள் அவரிடம் இருக்கிறதா? இப்படி அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் பேசுகிறார்.

போராட்டங்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாகப் பேசுகிறார். நாட்டின் யதார்த்த நிலை தெரியாமல் பேசுகிறார். எந்த தலைவர்களின் கட்டுப்பாட்டாலும் போராட்டங்கள் இப்போது நடைபெறுவது இல்லை. மக்களே தன்னெழுச்சியாகப் போராடுகின்றனர். எந்தத் தலைவர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். மக்களைச் சமாதானப்படுத்தும் நிலையில் தான் மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் இருக்கிறது. ரஜினியின் பேச்சு கண்டனத்துக்குரியது.

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் என்று பேசுகிறார். எந்த ஈழத் தமிழர் இவரிடம் இரட்டைக் குடியுரிமை கேட்டார்? ஈழத் தமிழர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். அவர்கள் இந்தியக் குடியுரிமையைத்தான் கேட்கின்றனர். ரஜினி தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பேச வேண்டும். தெரியாத விஷயங்கள் குறித்து மவுனமாக இருப்பது தான் மரியாதை" என தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in