தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான சம்மன் வரவில்லை: ரஜினி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான சம்மன் வரவில்லை: ரஜினி
Updated on
1 min read

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 18 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் மொத்தம் 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

18-வது கட்ட விசாரணையில் அதிகமாக ஒளிப்பதிவாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். இதில் ரஜினியிடமும் விசாரிக்கச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏனென்றால், ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூடு தொடர்பாகப் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு சில குறியீடுகளைப் பேசியுள்ளதாக ஆணையத்தில் சாட்சிகளாக ஆஜரானவர்கள் வாக்குமூலம் அளித்திருந்ததாகத் தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று (பிப்ரவரி 5) காலை ரஜினி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பான சம்மன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி, "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக எனக்கு இன்னும் நோட்டீஸ் வரவில்லை. நோட்டீஸ் வந்தவுடன் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நான் பேசியது தொடர்பாகத்தான் சம்மன் அனுப்பியுள்ளனர். அதற்கான விளக்கம் அவர்களுக்குக் கொடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார் ரஜினி.

தவறவிடாதீர்கள்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in