செங்கல்வராய அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கு 36 நாட்கள் இலவசப் பயிற்சி: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 

செங்கல்வராய அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கு 36 நாட்கள் இலவசப் பயிற்சி: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 
Updated on
1 min read

நீட் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து 36 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் சிறப்புப் பள்ளியின் மதிப்புறு இயக்குநர் எஸ்.எஸ்.ஜவஹர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு கட்டணம் ஏதுமின்றி நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் என அனைவருக்கும் 'நீட்- 2020' போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று எஸ்.எஸ்.ஜவஹர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளராக இருந்த எஸ்.எஸ்.ஜவஹர் தற்போது பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் சிறப்புப் பள்ளியின் மதிப்புறு இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

நீட் இலவசப் பயிற்சி குறித்து அவர் கூறுகையில், ''பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர் சிறப்புப் பள்ளி சார்பில் 'நீட்- 2020' போட்டித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 26.03.2020 முதல் 30.04.2020 வரை 36 நாட்கள் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இதற்கான இலவச அறிமுக வகுப்பு பிப்ரவரி 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இதில் சேர ஆர்வமும், விருப்பமும் உள்ள மாணவர்கள் உடனடியாக 044-26430029, 8668038347 தொலைபேசி எண்களை அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்'' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in