

பெரியாரின் கருத்துகளை எதிர்த்தோ, மறுத்தோ ரஜினிகாந்த் பேசவில்லை, என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் ஈரோட்டில் நேற்று நடந்த மகாத்மா காந்தி நினைவு சொற்பொழிவுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடந்தாலும், அப்போது ரஜினிகாந்த் தேர்தல் களத்திற்கு வருவார். அவர் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள், தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
பெரியாரின் கருத்துகள் குறித்தோ, அவரின் சமூக செயல்பாடு நிலை குறித்தோ, பணிகள் குறித்தோ, அவரது அரசியல் குறித்தோ, எதிர்த்தோ அல்லது மறுத்தோ ஒரு வார்த்தை கூட ரஜினிகாந்த் கூறவில்லை.
ஆனால், பெரியாரை அவர் விமர்சித்தார் எனக்கூறி அவரை அச்சுறுத்தி, போயஸ் தோட்டத்திக்குள்ளே முடக்கி விடுவதற்கான முயற்சியை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். ரஜினியை எதிர்த்த பெரியாரியவாதிகள் தற்போது உண்மை நிலையைத் தெரிந்து கொண்டுள்ளனர், என்றார்.