

'சோ'வை ஆளாக்கிய இரண்டு எதிரிகளில் ஒருவர் பக்தவச்சலம். மற்றொருவர் கருணாநிதி என்று ரஜினிகாந்த் பேசினார்.
துக்ளக்கின் 50-வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரஜினிகாந்தின் பேச்சு வருமாறு:
“ஒருவர் அனைத்துத் துறைகளிலும் பிரபலமாவதற்குக் காரணமாக இருப்பது அவரின் எதிரிகள். எதிர்த்தவர்களாலேயே அவர்கள் பெரியாளாவார்கள். சில நேரங்களில் சில சூழ்நிலைகள் உருவாகும். அதை எப்படிக் கையாளுகிறார்கள் என்பது முக்கியம். 'சோ'வைப் பெரியாளாக்கியவர்கள் இரண்டு பேர். எதிர்த்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் பக்தவச்சலம், மற்றொருவர் கலைஞர்.
அப்போது பக்தவச்சலம் முதல்வர். சோ சாதாரண நடிகர். வக்கீல், சிறு சிறு நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார். அவர் சம்பவாமி யுகே யுகே என்று நாடகம் போட்டார். அதில் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தார். அதற்கு வழக்குப் போட்டார் பக்தவச்சலம். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி வென்றார் சோ. சாதாரண 'சோ'வை அன்று பெரிய ஆளாக்கியவர் பக்தவச்சலம்.
1971-ல் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அதை யாரும் பத்திரிகையில் போடவில்லை. சோ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்குச் சிக்கல் உருவானது. அதன் பின்னர் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். அதற்கு அடுத்த வாரம் மீண்டும் அச்சடித்து கருப்பு நிறத்தில் அட்டை வெளியிட்டார் சோ. அந்தப் பத்திரிகை அதிக அளவில் விற்றது.
அதன்மூலம் பத்திரிகை உலகில் பிரபலமானார் சோ. அதற்குக் காரணமானவர் கருணாநிதி. அதற்கு அடுத்த இதழில் தங்கள் பத்திரிகையின் பப்ளிசிட்டி மேனேஜர் என்று கலைஞர் படத்தைப் பெரிதாக போட்டார் சோ.
இன்னொரு சம்பவம் தமிழ்நாட்டுக்கு மட்டும் தெரிந்த 'சோ'வை அகில இந்திய அளவில் பிரபலமாக்கியவர் இந்திரா காந்தி. 1975-ம் ஆண்டு மிசா இந்தியா முழுவதும் அமலானது. அப்போது 'சோ' தனது பத்திரிகை மூலம் மிகக் கடுமையாகப் போராடினார். அவருக்கு எதிரான அடக்குமுறைகளால் அகில இந்தியத் தலைவர்களிடம் சோ சென்று சேர்ந்தார். வாஜ்பாய், அத்வானி, சந்திரசேகர், ராமகிருஷ்ண ஹெக்டே என பெரிய தலைவர்களிடம் சோ நெருக்கமானார். அதற்கு வழி வகுத்தவர் இந்திரா காந்தி.
கவலைகள் வரும் அதை நிரந்தரமாக்கிக் கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமாக்கிவிட்டால் அறிவாளி. சோ அந்த அறிவாளி. அவர் கவலைகளைத் தற்காலிகமாக்கிக் கொண்டார். இப்போது சோ போன்ற பத்திரிகையாளர் மிக மிக அவசியம்”.
இவ்வாறு ரஜினி பேசினார்.