நாகை, திருக்கடையூர் ரேக்ளா ரேஸுக்கு உயர் நீதிமன்றம் தடை 

நாகை, திருக்கடையூர் ரேக்ளா ரேஸுக்கு உயர் நீதிமன்றம் தடை 
Updated on
1 min read

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் நெடுஞ்சாலையில் குதிரை மற்றும் மாடுகளை வைத்து நடத்தப்படும் ரேக்ளா ரேஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 17-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் நெடுஞ்சாலையில் குதிரை மற்றும் மாடுகளை வைத்து ரேக்ளா ரேஸ் நடத்தப்படும். இந்த ஆண்டும் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சங்கமித்ரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “ரேக்ளா ரேஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்குக் காப்பீடு செய்யாமல், விலங்குகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமல், அரசியல் பிரமுகர்களின் சுயலாபத்திற்காக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ரேக்ளா ரேஸில் பங்கேற்ற குதிரைகள், மாடுகள் துன்புறுத்தப்படுவது, இரு பிரிவினைரிடையே மோதல்கள் காரணமாக மயிலாடுதுறை பகுதிகளில் ரேக்ளா ரேஸ் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஆகையால், ரேக்ளா ரேஸுக்குத் தடை விதிக்க வேண்டும். மயிலாடுதுறையில் தடை செய்யப்பட்டதுபோன்று இங்கும் தடை விதிக்க வேண்டும். மீறி ரேஸ் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்குப் பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ''கடந்த ஆண்டு தரங்கம்பாடியில் ரேக்ளா ரேஸ் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருக்கடையூரில் தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்தத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in