

பாலியல் வழக்கில் சமூக ஆர்வலர் முகிலனுக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் என்ற சண்முகம். ஜல்லிக்கட்டு ஆதரவு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி 15-ல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோவை வெளியிட்ட பின் முகிலன் மாயமானார்.
முகிலனை கண்டுபிடிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனைவி ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து முகிலன் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே முகிலன் மீது குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் பாலியல் புகார் அளித்தார். போலீஸார் முகிலன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்தனர். முகிலனை போலீஸார் தேடி வந்த நிலையில் மாயமாகி ஐந்தரை மாதங்களுக்கு பிறகு கடந்த ஜூலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாலியல் வழக்கில் முகிலனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நவ. 11-ல் ஜாமீன் வழங்கியது. அப்பேது முகிலன் 2 நாளுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி ஆய்வாளர் அலுவலகத்தில் காலை 10.30-க்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.
இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி முகிலன் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று (ஜன.13) விசாரித்தார்.
பின்னர், 2 நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை வாரம் ஒரு முறை கையெழுத்திட வேண்டும் என மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.