பதவியேற்பு விழாவில் கண் கலங்கிய பெண் ஊராட்சித் தலைவர்: திருப்புவனத்தில் நெகிழ்ச்சி 

பதவியேற்பு விழாவில் கண் கலங்கிய பெண் ஊராட்சித் தலைவர்: திருப்புவனத்தில் நெகிழ்ச்சி 
Updated on
1 min read

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றனர்.

அதன்படி சிவகங்கை மாவட்டம் கே.பெத்தானேந்தல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் பதவியேற்றனர். தனது முதல் அரசியல் பிரவேசத்தில் வெற்றியடைந்த இளம் பிரதிநிதி ராமேசுவரி முனியாண்டி தனக்கு வெற்றியைத் தந்த மக்களைப் பார்த்து கரங்கூப்பி கண் கலங்கி நன்றி தெரிவித்தது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் கே. பெத்தானேந்தல் ஊராட்சியில் கேபி.மணல் மேடு, கருங்குளம், சடங்கி, பெத்தானேந்தல் ஒத்த வீடு கிராமங்கள் உள்ளன.

இவ்வூராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பெத்தானேந்தல் ராமேசுவரி முனியாண்டி, மணல்மேடு கன்யா சிங்கத்துரை போட்டியிட்டனர். இவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

ராமேசுவரி முனியாண்டி 375-க்கும் மேற்பட்ட வாக்கு பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து இன்று (திங்கள்கிழமை) ஊராட்சித் மன்ற அலுவலகத்தில் பதவி ஏற்பு விழா நடந்தது.

ஊராட்சித் தலைவர் ராமேசுவரி முனியாண்டி, உறுப்பினர்கள் வடிவேல், ராமதுரை, சரண்யா கண்ணன், மாரிமுத்து ஊர் காவலன், போதும் பொன்னு நாச்சியம்பலம், பாப்பாத்தி கண்ணன், கோபி, உஷாராணி குமார், பெரியசாமி ஆகியோருக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கதிரவன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின்னர், ராமேசுவரி கண் கலங்கினார். பின்னர் தலைவர், உறுப்பினர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ராஜா, ஜெயராஜ், நாச்சி, சிவாஜி, அம்பலம், பாண்டி உட்பட கிராம பொது மக்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற தலைவர், உறுப்பினர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் சந்தன மாலை, சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in