இயற்கை வேளாண் முறையில் ஒரே இடத்தில் 110 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ள விவசாயி

வரிச்சிக்குடியில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ள நிலத்தை பார்வையிட்டு, தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்ட புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன். உடன் விவசாயி எம்.பாஸ்கர், வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர்.
வரிச்சிக்குடியில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ள நிலத்தை பார்வையிட்டு, தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்ட புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன். உடன் விவசாயி எம்.பாஸ்கர், வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

இயற்கை வேளாண் முறையில், 110 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை காரைக்கால் விவசாயி தனது வயலில் பயிரிட்டுள்ளார்.

காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடியைச் சேர்ந்தவர் எம்.பாஸ்கர். கடந்த 12 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு
வரும் இவர், தற்போது 110 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை தனது வயலில் பயிரிட்டுள்ளார். இதுகுறித்து எம்.பாஸ்கர் கூறியதாவது: நம் நாட்டில் ஏராளமான நெல் ரகங்கள் இருந்துள்ளன. அவை காலப்போக்கில் அழிந்துவிட்டன. நம்மாழ்வார், நெல் ஜெயராமன் உள்ளிட்டோரின் முயற்சிகளால் சில நெல் ரகங்கள் மட்டும் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு 25 பாரம்பரிய ரகங்களை பயிரிட்டிருந்தேன். நிகழாண்டு, பல இடங்களுக்கும் சென்று, நண்பர்களின் உதவி
யுடன் விதைநெல்லை சேகரித்து, 5 ஏக்கர் பரப்பளவில் ஒட்டடையான், மாப்பிள்ளைச் சம்பா, கருப்புக் கவுனி, காட்டு யானம், ராஜமன்னார், மிளகு சம்பா, கிச்சடி சம்பா, கட்டை சம்பா உள்ளிட்ட 110 வகையான நெல்ரகங்களை சாகுபடி செய்துள்ளேன். இந்த நெல் ரகங்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன என்றார்.

இந்நிலையில், அந்த விளைநிலங்களை கூடுதல் வேளாண் இயக்குநர் (பொ) ஜெ.செந்தில்குமார் உள்ளிட்ட வேளாண் அதி
காரிகளுடன், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் நேற்று முன்தினம் பார்வையிட்டு நெல் ரகங்கள், தன்மைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

இயற்கை விவசாயம் பல இடங்களில் செய்யப்பட்டிருந்தாலும், இங்கு மட்டும்தான் ஒரே இடத்தில் 110 பழமையான நெல்
ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளாக இந்த இடத்தில் இயற்கை வேளாண்மை நடைபெறுவதால், அதற்கேற்ற வகையில் தற்போது மண்வளம் மாறியிருப்பதை விளைச்சல் மூலம் காண முடிகிறது. இந்த விவசாயியின் முயற்சி பாராட்டத்தக்
கது. இதை ஆவணப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை புதுவை வேளாண்துறை மேற்கொள்ளும். இது
குறித்து மத்திய உணவு அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in