கடற்கரை, கோவில் குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க என்ன நடவடிக்கை?- பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதிக்கெடு

கடற்கரை, கோவில் குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க என்ன நடவடிக்கை?- பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதிக்கெடு
Updated on
1 min read

கடற்கரை, கோவில் குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து , தமிழக அரசு பதிலளிக்க இறுதி கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பது என்பது தொடர் நிகழ்வாக இருப்பதால், கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவிகளில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவ வாய்ந்தவர்கள் கொண்ட குழு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தமிழகத்தில் உள்ள அருவிகள், ஆறுகள், உள்ளிட்ட நீர்நிலைகள், சுற்றுலா தலங்களில் உயிரிழப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில் பொங்கல் பண்டிகை விடுமுறை வருவதால், ஆறு,குளம்,கடற்கரை க்கு செல்வார்கள். எனவே நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க அதற்கு முன்பாகவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு எடுக்கும் என தெரிவித்த நீதிபதிகள் , வழக்கு குறித்து பிப்ரவரி 3-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு இறுதி கெடு விதித்து விசாரணையை தள்ளிவைத்தனர்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in