

வாணியம்பாடி அடுத்த நெக்னா மலைக்கு சாலை வசதி இல்லாத தால் உயிரிழந்தவர் உடலை டோலி கட்டி சுமந்து சென்றனர். விரைவில், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உறுதியளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்கனா மலை கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு, 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலித் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சாலை, மின்விளக்கு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
நெக்னாமலையில் அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. மலைமீது உள்ள பள்ளிக்கு வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே ஆசிரியர்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. மற்ற நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் படிக்காமல் வீடு திரும்புகின்றனர். மலையில் இருந்து வாணியம்பாடிக்கு வர வேண்டுமென்றால் சுமார் 5 மணி நேரம் நடந்து வர வேண்டியுள்ளது.
இங்கு, சாலை வசதி, குடிநீர், மின்விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் சென்றவர்கள் அங்கேயே நிரந்தர மாக தங்கிவிடுகின்றனர். இதனால், மலையில் வசிப்போரின் எண் ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து கொண்டே செல்வதாகவும், மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் படிப் படியாக அழிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
மேலும், மலையில் வசிக்கும் பெண்கள், முதியோர், குழந்தை, கர்ப்பிணி போன்றவர்களுக்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் ‘டோலி’ கட்டி சுமந்து வரும் நிலை கடந்த 70 ஆண்டுகளாக தொடர்கிறது.
இதுகுறித்து வருவாய் மற்றும் வனத்துறையினர், ஆட்சியாளர்கள் என பலரிடம் புகார் தெரிவித்தும் நெக்னாமலைக்கு சாலை வசதியை ஏற்படுத்தித் தர யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சாலை வசதி கேட்டு போராடி வருவதாக மலைவாழ் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், நெக்னா மலையைச் சேர்ந்த முனுசாமி (28) என்பவர் கோவையில் கட்டிட வேலைக்காக சென்ற போது அங்கு மின்சாரம் தாக்கி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் வாணியம்பாடிக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மலைகிராமத்துக்கு முனுசாமியின் உடல் டோலி கட்டி 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு தொளில் சுமந்து சென்றனர்.
முனுசாமியின் மனைவி அனிதா (23) தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அவரும் கணவர் உடலுடன் 7 கிலோ மீட்டர் தொலைவு மலை மீது நடந்து செல்ல முடியாமல் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்தபிறகு மலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இரவு 10 மணிக்கு சென்றவர்கள் அதிகாலை 2.50 மணிக்கு மலையை அடைந்து அங்கு முனுசாமியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய் தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று ‘இந்து தமிழ் திசையிடம் கூறும்போது, ‘‘திருப் பத்தூர் மாவட்டம் உருவான போதே நெக்னாமலைக்கு சாலை வசதி இல்லை என்பதை தெரிந்துக் கொண்டேன். இதுபற்றி வரு வாய்த் துறையினருடன் தனியாக ஆலோசனையும் நடத்தப்பட்டது.
அங்கு வனத்துறைக்கு சொந்த மான இடத்தில் தான் சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். வனத்துறையினர் இடத்தை கையகப்படுத்தினால், அதற்கு ஈடாக 2 மடங்கு இடத்தை வனத் துறைக்கு வழங்க வேண்டியுள்ளது. அதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. மலை யடிவாரத்தில் இருந்து நெக்னா மலைக்கு செல்ல தனியாக சாலை வசதிகள் செய்து கொடுக்க தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், குடிநீர், பொது சுகாதாரம், மின்விளக்கு, கல்வி உள்ளிட்ட அனைத்து வசதி களும் செய்துத் தர திட்ட அறிக்கை யும் தயார் நிலையில் உள்ளது.
வனத்துறையினருடன் இன்னும் சில பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. அது முடிந்த பிறகு, அரசு அனுமதியுடன் நெக்னா மலைக்கு தார்ச்சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றார்.