Published : 23 Nov 2019 11:27 AM
Last Updated : 23 Nov 2019 11:27 AM

ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டால் தான் நாடு வளம் பெறும்: ஜி.கே.வாசன்

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்பட்டால் தான் கல்வித் தரமும் உயர்ந்து, வேலைவாய்ப்பும் பெருகும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (நவ.23) வெளியிட்ட அறிக்கையில், "ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகியவற்றில் பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க மத்திய அரசு ஆணையிட்டிருப்பது கண்டிப்பாக முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகியவற்றில் பணியிடங்கள் காலியாக இருப்பின் அவற்றை இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப காலம் தாழ்த்தாமல் நிரப்ப வேண்டும். அவ்வாறு பணியிடங்கள் நிரப்பப்படும் போது பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம், பட்டியலினத்தவருக்கு 15 சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் என்றால் அதற்கேற்ப காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை. அதாவது பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஆசிரியர் பணியிடங்களில் உரிய ஒதுக்கீடு செய்யப்படாமல் அவர்களின் விண்ணப்பமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதற்கெல்லாம் காரணம் தொழில்நுட்ப பணிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை ஆணைப் பிறப்பித்தது தான். இந்நிலையில் தான் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை பொருட்படுத்த தேவையில்லை என்று கூறியிருப்பதோடு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவருக்கு 27%, படியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் அவரவருக்கு உரிய இடஒதுக்கீடு உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கிடைக்கப்பெற்றால் சமூக பொருளாதாரத்தில் அனைத்து சமுதாயத்தினரும் முன்னேற்றம் அடைந்து நாடும் வளம் பெறும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும், கல்வி கற்றுத்தரும் பேராசியர்களுக்கும், பணியிடங்களுக்கும் உரிய கோட்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றதா என்பதை தொடர் நடவடிக்கையின் மூலம் கண்காணித்து கல்வித்தரத்தையும், பணியிடங்களையும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத வகையில் மத்திய அரசு உறுதி செய்துகொள்ள வெண்டும்.

எனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஆணையிட்டபடி ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு முறையாக சரியாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்து தொடர் நடவடிக்கை எடுக்கும் போது உயர்கல்வியில் கல்வித் தரமும் உயர்ந்து, வேலைவாய்ப்பும் பெருகி மக்களுக்கு ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றில் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது தான் தமாகா வின் எதிர்பார்ப்பாகும்," என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x