Published : 16 Nov 2019 08:37 AM
Last Updated : 16 Nov 2019 08:37 AM

ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கில் ரகசிய அறிக்கையை பார்வையிட திமுகவை அனுமதிக்கலாமா? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான ரகசிய அறிக்கையை திமுக வேட்பாளர் பார்வையிட அனுமதிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அதன்தொடர்ச்சியாக அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி அபிராமபுரம் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ், இதே கோரிக்கையை வலியுறுத்தியும் வருங்காலங்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் வருமானவரித் துறை சார்பில் உயர் நீதிமன்றத்துக்கு ரகசிய அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால் எங்களால் விசாரணையின் உண்மை விவரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே, இந்த வழக்கில் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட டைரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனக் அதில் கோரியிருந்தார்.

அப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ‘‘தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரகசிய அறிக்கைகளை மனுதாரர்தரப்பில் பார்வையிட அனுமதிக்கலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் டிச.18-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x