

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரம் பகுதியில், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சோழவரம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, 2 மினி வேன்கள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டி போட்டுக்கொண்டு வேகமாக சென்றன. போலீஸார் அந்த மினி வேன்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
அதில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 1,250 கிலோ எடை கொண்ட சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்கள் மற்றும் வேன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீஸார், வேன் ஓட்டுநர்களான, சென்னை- தேனாம்பேட்டை அசோக்குமார், கவரைப்பேட்டை சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.