

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து படுகாயமடைந்தது குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என, திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி இன்று (நவ.14) வெளியிட்ட அறிக்கையில், "கோவையில் ஆளும் அதிமுகவினரால் நடுரோட்டில் வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகு பலியானார். கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு சென்னை, பள்ளிக்கரணையில் அதிமுகவினரால் நடுச்சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியானார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 11-11-2019 அன்று, முன்பு கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. வழக்கம் போல் கடந்த 11-ம் தேதி காலை வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, அவிநாசி சாலை கோல்ட்வின்ஸ் அருகே சாலையோரத்தில் நடப்பட்டிருந்த ஆளும் அதிமுக கட்சி கொடிக் கம்பம் கீழே விழுந்து பின்னால் வந்த லாரி ராஜேஸ்வரி மீது ஏறி விபத்துக்குள்ளானதில், இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சேலத்தில் தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அனைத்து ஊடகங்கள் செய்தி வெளிவந்தபோதும், முதல்வர் பொறுப்பற்ற முறையில் "இது குறித்து எனது கவனத்திற்கு வரவில்லை" என்று கூறியிருக்கிறார்.
கோவை மாநகர மக்களே இவ்விபத்து குறித்து கவலையுடனும், கோபத்துடனும் ஆர்ப்பரித்திருந்த நேரத்தில், இதுகுறித்து விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நியாயமான விசாரணை நடத்தி, சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தி, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட, முறைப்படி, காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், அனுமதி மறுத்து கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை ஜனநாயகத்திற்கு விரோதமாக - அராஜகமாக கைது செய்துள்ளது தமிழக அரசு.
கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த காவல்துறையினரிடம் முறையாக அனுமதி கேட்டும், தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, பிறகு உயர் நீதிமன்றத்தை அணுகி, அந்நீதிமன்றங்கள் மூலம் கூட்டம் நடத்திட வேண்டிய அவலநிலை உள்ளது.
இதற்கு மூல காரணமாக இருப்பது அம்மாவட்டத்தில் உள்ள அதிமுக அமைச்சரும் - அவருக்கு உறுதுணையாக முதல்வரும் செயல்பட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
நடைபெற்ற நிகழ்வை மூடி மறைப்பதற்காக தமிழக அரசு இதுபோன்ற ஜனநாயக விரோத - சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருவது கண்டனத்திற்குரியது.
எனவே, தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்து, ராஜேஸ்வரிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து உரிய நேர்மையான - நியாயமான விசாரணை செய்து, உரியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்," என ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.