துணை முதல்வருக்கு சிறப்பு பதக்கம்
துணை முதல்வருக்கு சிறப்பு பதக்கம்

ஓபிஎஸ்ஸுக்கு 'மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்' பதக்கம்: அமெரிக்காவில் கவுரவிப்பு

Published on

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில் சிறப்புப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

அரசுமுறை பயணமாக, அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று (நவ.12) நெபர்வல்லியில் உள்ள மூத்த குடிமகன்களுக்கான 'மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ்' மையத்தின் சார்பில், காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு 'மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்' பதக்கம் வழங்கப்பட்டது.

பதக்கத்தினை வழங்கிய 86 வயதான பிரதாப்சிங், துணை முதல்வர் மற்றும் தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமாருக்கு காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வின் போது தமிழக நிதித் துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன், உலகத் தமிழ் இளைஞர் பேரவை தலைவர் விஜய பிரபாகர், மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ் மையத்தின் நிறுவனர் சந்தோஷ்குமார் மற்றும் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதனிடையே இன்று சிகாகோ நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் உரையாற்றினார்.

அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் 'உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது-2019’ வழங்கும் விழா சிகாகோவில் நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம் - ஆசியா’ விருது வழங்கப்பட்டது. நேற்று முன் தினம் சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் 'தங்கத் தமிழ் மகன்' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in