Last Updated : 11 Nov, 2019 01:36 PM

 

Published : 11 Nov 2019 01:36 PM
Last Updated : 11 Nov 2019 01:36 PM

மதுரை உட்பட 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ளுவதற்கான தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை

மதுரை உட்பட 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை முதலில் தாக்கல் செய்த மனுதாரர் திடீரென திரும்பப் பெற்ற நிலையில், இனிமேல் இந்த வழக்கை உயர் நீதிமன்றமே மனுதாரராக இருந்து தொடர்ந்து விசாரிக்கும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைக்குட்டத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் இலந்தைக்குட்டம், சித்தார்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சவுடு மண் அள்ளத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட மதுரை உட்பட 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ளுவதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நாகேந்திரன் தனது பொதுநலன் மனுவை திடீரென திரும்பப் பெற்றார்.

அப்போது இந்த வழக்கில் 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ளுவதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருப்பதை நீதிபதிகளிடம் சொல்லப்படவில்லை. இதனால் மனுவை திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதித்தனர்.

இந்நிலையில் தடையை மறைத்து மனுவை திரும்பப் பெற்று சவுடு மண் தொடர்பாக மற்றொரு வழக்கு தாக்கல் செய்துள்ளதை திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் வழக்கறிஞர் நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுச் சென்றார்.

இதையடுத்து மனுதாரர் நாகேந்திரன் இன்று (திங்கள் கிழமை) நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நாகேந்திரன் நேரில் ஆஜராகி, "எங்கள் கிராமத்தில் சவுடு மண் அள்ளத் தடை கோரி பொதுநலன் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் நீதிமன்றம் 13 மாவட்டங்களிலும் சவுடு மண் அள்ள ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

இதனால் எனக்கு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. சவுடு மண் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலர் என் வீட்டிற்கு வந்து மனைவியை மிரட்டியுள்ளனர். இதனால் எனக்கும் மனைவிக்கும் தகராறு வருகிறது. மனைவி விவாகரத்து செய்வதாகச் சொல்கிறார். இதனால் மனுவை திரும்பப் பெற்றேன்" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கிலிருந்து மனுதாரர் விடுவிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக உயர் நீதிமன்ற பதிவாளரை மனுதாரராகக் கொண்டு வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும்.

இந்த வழக்கை முந்தைய அமர்வு (நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி) விரிவாக விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்த வழக்கை அந்த அமர்வின் முன்பு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரை 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x