

சென்னை
குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி மிகுந்த மனவேதனையை அளிப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று (அக்.29) வெளியிட்ட அறிக்கையில், "திருச்சி மாவட்டம், மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று பிரிட்டோ ஆரோக்கியராஜ் என்பவரின் நிலத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், அவருடைய இரண்டு வயது மகன் சுஜித் தவறி விழுந்து விட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.
இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், சிறுவனை உயிருடன் மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு, நல்வாழ்வு துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டிருந்தேன்.
எனது உத்தரவின் பேரில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், இரவு பகலாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். குழந்தையை உயிருடன் மீட்பதற்காக அதிநவீன இயந்திரங்களை கொண்டு குழந்தை சிக்கிக் கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே புதியதாக ஒரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டும் பொழுது கடினமான பாறைகள் இருந்தால் மீட்புப் பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அச்சிரமங்கள் அனைத்தையும் வல்லுநர் குழு உதவியுடன் சரிசெய்து குழந்தையை உயிருடன் மீட்க இரவு, பகலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.
ஏற்கெனவே ஆழ்துளை கிணறு அமைக்கும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விதிகளை வகுத்து, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் சரியாக கடைபிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இதில் கவனக்குறைவு ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இனி வருங்காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொதுமக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மீட்புப்பணிகளை இரவு பகலாக மேற்கொண்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை சுஜித் வில்சன் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.