நில அபகரிப்பு வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜர்
மதுரை
முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (அக்.23) நேரில் ஆஜரானார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டையில் தனது மகன் துரை தயாநிதி பெயரில் தயா பொறியியல் கல்லூரியை அழகிரி கட்டியுள்ளார். இந்நிலையில் சிவரக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தயா பொறியியல் கல்லூரி கட்டுவதற்காக விநாயகர் கோயில் இடத்தை அழகிரி தரப்பு ஆக்கிரமித்ததாக நில அபகரிப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க.அழகிரி, சம்பத், ஆதிலெட்சுமி, சேதுராமன், சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் சம்பந்தப்பட்ட மு.க.அழகிரி, சம்பத், சேதுராமன், சதீஷ்குமார் ஆகிய 4 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மேலும் எம்.பி.யாக இருக்கும்போது தனது வேட்பு மனுவில் சொத்துகளைக் கணக்கில் காண்பிக்காத காரணத்திற்காக அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கிலும் இன்று அழகிரி ஆஜரானார்.
இந்த இரண்டு வழக்கையும் விசாரித்த மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 6- ன் நீதிபதி ஸ்ரீதேவி வழக்கு விசாரணையை 13-11-2019க்கு ஒத்தி வைத்தார்.
