நளினியைத் தொடர்ந்து ராபர்ட் பயஸ் பரோல் கேட்டு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நளினியைத் தொடர்ந்து ராபர்ட் பயஸ் பரோல் கேட்டு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரில் ஒருவரான ராபர்ட் பயஸ், தனது மகன் திருமணத்துக்காக பரோல் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 4-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 அண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்க்கோவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சிறைத்துறை டிஐஜிக்கு அளித்த மனு மீது 40 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பரோல் கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறைத்துறையின் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய இருப்பதால் வழக்கை நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

ஆனால், ராபர்ட் பயஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ் முதன்முறையாக பரோல் கேட்பதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்பதால் அதைப் பரிசீலித்து உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

பின்னர் அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in