நீதிமன்ற வழக்கு, ஆலைகள் மூடல் காரணமாக சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் வீழ்ச்சி: விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு

நீதிமன்ற வழக்கு, ஆலைகள் மூடல் காரணமாக சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் வீழ்ச்சி: விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு
Updated on
2 min read

இ.மணிகண்டன்

சிவகாசி

பட்டாசுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பசுமைப் பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு, 3 மாதங்களாக ஆலைகள் மூடல் உட்பட பல்வேறு காரணங் களால் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்து 70 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சத் துக்கும் அதிகமானோர் உபதொழில்கள் மூலமும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவை யில் 95 சதவீதத்தை சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பட் டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகி றது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தது. ஆனால் பட்டாசு தயாரிக்க முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் பேரியத்துக்கும், சரவெடி தயாரிப்பதற்கும் தடை விதித்தது. இனி அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் எதிரொலியாக கடந்த தீபாவளிக்குப் பிறகு சிவகாசியில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகள் 3 மாதங்கள் மூடப்பட்டன. இதனால் இந்த ஆண்டு 40 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ஏ.பி.செல்வராஜன் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் கட்டுப் பாடுகளாலும், பசுமைப் பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற உத்தரவாலும் பட்டாசு ஆலைகள் அனைத்தும் 3 மாதங்கள் மூடப்பட்டன. இதனால் பட்டாசு உற்பத்தி 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் பட்டாசுக்கான ஆர்டர்கள் போதிய அளவு உள்ளன. இருந்தபோதிலும் அந்த அளவுக்கு உற்பத்தி இல்லை.

வட மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற காரணங்களாலும் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு காரணமாகவும், தேவை அதிகமாக உள்ளதாலும் இந்த ஆண்டு பட்டாசு விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆசைத்தம்பி கூறும்போது, ‘‘3 மாத வேலை இழப்பால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 30 முதல் 40 சதவீதம் குறைந்துள்ளது. வேலை இல்லாததால் தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்குச் சென்றுவிட்டனர். இதுவும் பட்டாசு உற்பத்தி குறைந்ததற்கு முக்கிய காரணம். வட மாநிலங்களில் இந்த ஆண்டு வழக்கமான அளவு ஆர்டர்கள் வந்தாலும் அந்த அளவுக்கு பட்டாசுகளை உற்பத்தி செய்துகொடுக்க முடியவில்லை’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in