

தேனி
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடசேனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிய மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஜாமீன் கோரி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனு இன்று நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை வந்தது.
ஆனால், நீதிபதி பன்னீர்செல்வம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். உதித் சுரியாவின் தந்தை வெங்கடேசனை மீண்டும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மாணவர் இர்பான் ஆஜர்..
மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தையும் அளித்த தகவலின்படி, மேலும் இரு மாணவர்கள் சிக்கினர். இவர்களில் மாணவர் இர்பான் இன்று ஆண்டிப்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ஆண்டிப்பட்டி நீதித்துறை நீதிமன்ற நீதிபதி மகேந்திர வர்மா, "நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடப்பதால் அங்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார்.
ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மாணவர் இர்பான் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்"