

ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தன் பாதுகாப்பு வாகனத்தில் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, நேற்று (அக்.7) ஒத்தக்குதிரை மற்றும் தாசம்பாளையம் பகுதிக்கு இடையில் ஆனந்த கிருஷ்ணன் என்பவர் தனது மனைவி பேபி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி நிலை தடுமாறி விழுந்ததில் மூவரும் விபத்தில் சிக்கினர். இதில் மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டன.
அச்சமயத்தில், அவ்வழியே காரில் வந்த பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன், தன் காரை நிறுத்தி விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளித்தார்.
விபத்தில் சிக்கிய சிறுமிக்கு முதலுதவி அளிக்கும் அமைச்சர்
மேலும், அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
கோவிந்தராஜ்