ஆயுத பூஜை, தீபாவளிக்காக சிறப்புப் பேருந்து முன்பதிவு தொடங்கியது

ஆயுத பூஜை, தீபாவளிக்காக சிறப்புப் பேருந்து முன்பதிவு தொடங்கியது
Updated on
1 min read

சென்னை

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்ல, சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

தொடர் விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்காக சென்னையில் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தாம்பரம் மெப்ஸ், தரமணி, மாதவரம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தொடங்கியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வரும் 23-ம் தேதி முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன.

கடந்த ஆண்டு ஊரப்பாக்கத்தில் அரசு எஸ்இடிசி பேருந்துகளுக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. அங்கிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சனி, ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து ஆயுத பூஜை, விஜயதசமியை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் என 6,145 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அதேபோல தீபாவளிப் பண்டிகைக்கு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in