

மதுரை
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவின் முன்ஜாமீன் மனுவை அவரின் வயது மற்றும் மனநலப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஜாமீன் மனுவாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஒப்புதல் தெரிவித்தார். மேலும், மாணவரின் பிரச்சினைக்குக் காரணம் அவரது தந்தையே என்றும் நீதிபதி சாடினார்.
மாணவர் உதித் சூர்யா மனு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஜாமீன் வழங்குமாறு கோரப்பட்டது. அதற்கு நீதிபதி, "அன்றே சரணடைவதாக உறுதி அளித்திருந்தால் ஜாமீன் மனுவாக விசாரிக்கலாம். ஆனால் மாணவர் சரணடையவில்லை. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆகையால் முன்ஜாமீன் வழங்க இயலாது" என தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "மனுதாரர் மனநலப்பிரச்சனை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி விசாரணையில் அவர் தன்னுடைய தகவல்களைக் கூறிவிட்டார். அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகையால் மாணவரின் வயது மற்றும் மனநலப்பிரச்சனையை கருத்தில் கொண்டு ஜாமீன் மனுவாக விசாரிக்க வேண்டும்" எனக் கோரினார்.
மாணவரின் தந்தையே காரணம்..
மனுதாரர் வாதத்தைக் கேட்ட நீதிபதி, மாணவரின் பிரச்சினைக்கு காரணம் மாணவரின் தந்தையே. மாணவரின் வயது மற்றும் மனநலப்பிரச்சனையை கருத்தில் கொண்டு ஜாமீன் மனுவாக விசாரிப்பதாகத் தெரிவித்தார். மேலும், வழக்கை அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
உதித் சூர்யா முன்ஜாமீன் மனு விவரம்:
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித் சூர்யா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,"கடந்த மே 5-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. அதில் நான் 382 மதிப்பெண்களை பெற்று இந்திய அளவில் 6704 ஆவது இடத்தை பிடித்திருந்தேன்.
அதன் அடிப்படையில் எனக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின்னர், அதிகாரிகள் திருப்தி அடைந்ததன் பேரிலேயே இடம் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேர்ந்தேன். இந்நிலையில் தீவிர மனநலப் பிரச்சனை மற்றும் மன அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி செப்டம்பர் 12-ம் தேதி படிப்பை நிறுத்தி முடிவெடுத்தேன். இந்நிலையில் செப்டம்பர் 17-ம் தேதி ஊடகங்களில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக செய்தி வெளியானது.
அவர்களிடம் உள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்று செல்போனில் எடுக்கப்பட்டது மற்றொன்று ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. ஆகவே, இரு புகைப்படங்களுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையிலும் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் தேனி கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் என் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் 20 வயதே நிரம்பியவர் என்பதால், கைது செய்யப்பட்டால் எனது எதிர்கால வாழ்வு வீணாகும் நிலை உள்ளது.
மேலும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை குழுவினரிடமும் உள்ளது. அதோடு வழக்கு தொடர்பாக எல்லாவித ஒத்துழைப்பையும் வழங்க உறுதி கூறுகிறேன். ஆகவே தேனி கண்டமனூர்விலக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.