Published : 25 Sep 2019 10:25 AM
Last Updated : 25 Sep 2019 10:25 AM
சென்னை
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து கடந்த செப்.22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அவர்களிடம் நேர்காணலும் நடத்தப்பட்டது. இதில், ஒரு தொகுதிக்கு 3 பேர் என பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தொடர்ந்து, நேற்று வேட்பாளரை இறுதி செய்வதற்காகவும், தேர்தல் பணி தொடர்பாக அறிவுரைகள் வழங்குவதற்காகவும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர்பழனிசாமி தலைமையில் மாலை 5 மணிக்குத் தொடங்கிய கூட்டம், 6.10 மணிக்கு நிறைவடைந்தது.
இதையடுத்து, விக்கிரவாண்டி, நாங்குநேரி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, இருவரும் இன்று (செப்.25) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி, அக்டோபர் 21-ம் தேதி நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகின்றனர்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியக் கழகச் செயலாளராக இருக்கும் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் விக்கிரவாண்டி தொகுதியிலும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருக்கும் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்," என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT