உதகையில் 5 ஆயிரம் பூந்தொட்டிகள் மூலம் கண்கவர் மலர் அலங்காரம்

உதகையில் 5 ஆயிரம் பூந்தொட்டிகள் மூலம் கண்கவர் மலர் அலங்காரம்
Updated on
1 min read

உதகை

இரண்டாம் சீசனை முன்னிட்டு, நீலகிரி தோட்டக்கலைத் துறை மூலம் உதகை தாவரவியல் பூங்காவில் 5,000 மலர்த் தொட்டிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதைச் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை மூலம் உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் காட்சி ஆகியவை நடத்தப்படுகின்றன. இதேபோல செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசனின் போது வட மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும்.

அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு பல வண்ணங்களில் சுமார் 2.5 லட்சம் மலர்ச் செடிகள் கொண்டு மலர்ப் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது அவை பூத்துள்ளன. 85 வகையான மலர்ச் செடிகள் அடங்கிய 15,000 மலர்த் தொட்டிகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இவை சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக ஒரு மாத காலம் வைக்கப்படும்.

இந்நிலையில், கண்ணாடி மாளிகை முன்பு 5,000 மலர்த் தொட்டிகளால் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மலர் அலங்காரங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. மலர்த் தொட்டிகள் மற்றும் அலங்காரத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.

தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் இதுகுறித்து கூறும்போது, ''விரைவில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மேலும் விஜயதசமி, ஆயுத பூஜை என தொடர் விடுமுறைகள் வரவுள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in