தலைமை நீதிபதி இடமாறுதல் விவகாரம்: மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு 

தலைமை நீதிபதி இடமாறுதல் விவகாரம்: மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு 
Updated on
1 min read

மதுரை,

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாறுதலை திரும்பப் பெற வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பிரதான வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போதைய மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.

இந்நிலையில் தலைமை நீதிபதியின் இடமாற்றத்தை திரும்ப்பெற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் கலந்துகொண்டுள்ளனர். உயர் நீதி மன்ற மதுரை கிளை மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றக் கூடிய சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தலைமை நீதிபதி இடமாறுதலில் கொலுஜியம் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும், காஷ்மீர் மாநில தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்த வேண்டும், நீதித்துறையில் அரசியல் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, "கொலிஜியம் தனது முடிவை மாற்றி தலைமை நீதிபதியின் இடமாறுதலை திரும்பபெறும் வரை போராட்டம் நீடிக்கும் எனவும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து வியாழக்கிழமை பொதுக்குழு கூடி முடிவு செய்வோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in