Published : 09 Sep 2019 02:27 PM
Last Updated : 09 Sep 2019 02:27 PM

புகழேந்தியின் பேச்சு வேறு கட்சிக்குச் செல்வது போல உள்ளது: வெற்றிவேல்

சென்னை

புகழேந்தியின் பேச்சு வேறு கட்சிக்குச் செல்வது போல உள்ளது என்று அமமுக செய்தித் தொடர்பாளர் வெற்றிவேல் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கு யாருடனும் இருக்க எனக்கு விருப்பம் இல்லை என்று அமமுக முக்கிய நிர்வாகியான புகழேந்தி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், ''முகவரி இல்லாமல் 14 வருடங்கள் வெளியே இருந்த டிடிவி தினகரனை ஊருக்குக் காண்பித்தது புகழேந்திதான். உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் ஜெயலலிதா இறக்கும்போது கூட தினகரன் கிடையாது. நாம்தான் போராட்டங்களை மேற்கொண்டுதான் அவரை வெளியே காண்பித்தோம்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், அமமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ வெளியானது குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய புகழேந்தி, ''கோவையில் நான் கட்சியினருடன் பேசியது உண்மை. ஆனால் அதிருப்தியில் இருந்தவர்களைச் சமாதானப்படுத்தவே அப்படிப் பேசினேன்.

வீடியோவில் கட்சியை விட்டு நான் போகிறேன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளேனா? வீடியோவை யார் எடுத்தது, எதைச் சேர்த்தார்கள், சிலதை ஏன் நீக்கினார்கள் என்பது எனக்குப் புரியவே இல்லை. முழுமையான வீடியோ வெளி வந்தால்தான், எல்லோருக்கும் உண்மை புரியும்.

எங்களுடைய ஐடி பிரிவில் இருந்தே வீடியோ வருவது நன்றாக இருக்கிறதா? இது நியாயமா? என்னை அசிங்கப்படுத்தவே வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக செய்தித் தொடர்பாளர் வெற்றிவேல், ''டிடிவி தினகரனை அறிமுகப்படுத்தியதே நான்தான் என்று புகழேந்தி சொல்வது தவறான கருத்து. அவர் நிர்வாகிகளுடன் பேசியதுதான் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை அமமுகவின் ஐடி பிரிவுதான் வெளியிட்டது என்று எப்படிக் கூறமுடியும்?

எல்லாக் கட்சிகளிலும் பொதுவாக சில பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அப்படி இருக்கும்போது பிரச்சினையை டிடிவி தினகரனிடம் எடுத்துச் செல்லாமல் இவராகப் பேசியது ஏன்?

தினகரன் நான்கு முறை அப்போலோ மருத்துவமனை சென்று ஜெயலலிதாவைப் பார்த்தார். அவரின் மனைவி மருத்துவமனையிலேயேதான் இருந்தார். இதற்கிடையில் புகழேந்தியால்தான் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது எந்த வகையில் நியாயம்? கர்நாடகாவில் இருந்த புகழேந்திக்கு, இங்கு வந்து பேசிய பிறகுதான் மரியாதை கிடைத்தது. அதை அவர் மறந்துவிடக் கூடாது.

பிரச்சினைகள் இருந்தால் பேசித் தீர்க்க வேண்டியதுதானே? இதைத் தலைமையுடன் சேர்ந்து முடிச்சுப் போடுவது தவறு. இவர் அதிருப்தி இருந்தால் தலைமையிடம் பேசியிருக்க வேண்டும். அதைவிடுத்துத் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் பேசியது ஏன்? புகழேந்தி பேசியதைப் பார்த்தால் வேறு கட்சிக்குச் செல்வது போலத்தான் உள்ளது'' என்று வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x