ராமேசுவரத்தில் திருமண தாம்பூல பையுடன் விதைப்பந்து: அரசு அதிகாரி அசத்தல்

ராமேசுவரத்தில் திருமண தாம்பூல பையுடன் விதைப்பந்து: அரசு அதிகாரி அசத்தல்
Updated on
1 min read

ராமேசுவரம்

மகளின் திருமண விழாவுக்கு வருகை தந்தோர் அனைவருக்கும் தாம்பூலப் பையுடன் விதைப் பந்துகளைக் கொடுத்து அசத்தியுள்ளளார் ராமேசுவரத்தைச் சேர்ந்த அரசு அதிகாரியான ராமநாதன்.

ராமேசுவரம் காளவாய் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் பகவதி என்ற ஜனனிக்கும் கோவை சூலூரைச் சேர்ந்த கெளதம் ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது. இதையோட்டி மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) ராமேசுவரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு மணமகள் வீட்டின் சார்பில் தாம்பூல பை வழங்கப்பட்டது. இந்த துணிப் பையிலிருந்த அட்டைப்பெட்டியில் புங்கன், வேம்பு, பூவரசு, சரக்கொன்றை, நெல்லி, நாவல் ஆகிய விதைப் பந்துகள் இருந்தன. ஒருவர் எத்தனை விதைபந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

தாம்பூலப் பையில் "இது இயற்கை அன்னையைக் காப்பதற்கான எங்களின் சிறு முயற்சி. இந்த முயற்சியை வெற்றி ஆக்குவதும் மேலும் தொடர்வதும் உங்கள் கைகளில்" என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து ராமநாதன் கூறுகையில், "கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அலுவலக ரீதியாக அனுப்பப்பட்டேன்.

கஜா புயல் ஏற்படுத்திய தாக்குதலினால் மரங்கள் வேருடன் வீழ்ந்து கிடந்த சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது. அப்போதே வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கு பதிலாக நம்மால் முடிந்த அளவு மரங்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

இதனால் எனது மகளின் திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு விதைபந்துகளை வழங்கிட முடிவு செய்து அவினாசி பகுதியிலிருந்து 6,000க்கும் அதிகமான விதைப் பந்துகளை வாங்கி வந்து ஒவ்வொரு பாக்கெட்டிலும் 6 விதைப் பந்துகளை வைத்து வழங்கினேன்" என்றார்.

எஸ். முஹம்மது ராஃபி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in