பால் விலை உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

பால் விலை உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை பசும் பாலுக்கு லிட்டருக்கு 4 ரூபாயும், எருமை பால் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் என உயர்த்தி அறிவித்த தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து கடந்த 19-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த விலை உயர்வை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தனியார் பால் நிறுவன பாலின் விலை அதிகமாக இருப்பதால் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் ஆவின் பாலை மட்டும் நம்பியுள்ளனர் எனவும், அரசியல் லாபத்துக்காக செலவிடும் பெருந்தொகையை மக்களின் தலையில் சுமத்தும் வகையில் இந்த விலையேற்றம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேசாயி அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்.6) விசாரணைக்கு வந்தது.

விவசாயி பிரச்சினைகளுக்கு எதிராக ஒரு புறம் போராட்டம் நடத்தும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு விலையை உயர்த்தினால் அதனை எதிர்த்து வழக்கு தொடர்வதா எனக் கேள்வி எழுப்பினார்.

டாஸ்மாக் கடைக்கு செல்பவர்களை திசை திருப்புவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில் வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்டு இந்தவழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in