

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் காணாமல்போன 27 நீர் நிலைகளை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், நீர்நிலைகளை அதன் பழைய நிலைக்கே மீட்டெடுக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், நீர்நிலைகளை கண்டறிந்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹில ரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.