பின்லாந்து கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்

பின்லாந்து கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்
Updated on
1 min read

கல்வித் துறை மற்றும் அது சார்ந்த தளத்தில் சிறப்பாக இயங்கி வரும் பின்லாந்து நாட்டின் கல்விமுறையை அறிந்துகொள்ள, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்லாந்து கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசினார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட கற்றல் பணிகளில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அதன் படி மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் சுற்றுப்பயணம் சென்று அங்குள்ள சிறந்த கல்வித் திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார்.

இதற்கிடையே சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த பின்லாந்து கல்வித் துறை அதிகாரிகள் தங்கள் நாட்டுக்கு வரும்படி செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்தனர். அதையேற்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலர் பிரதீப் யாதவ் தலைமையிலான கல்விக்குழு பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு 28-ம் தேதி புறப்பட்டுச் சென்றது.

அத்துடன் பின்லாந்து நாட்டின் ஜோன்சு ஹெய்னாபுரோடு நகரத்தில் உள்ள லிலுன்லாட்டி மழலையர் பள்ளியை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். அந்தப் பள்ளியில் பின்பற்றப்படும் கல்விமுறை, கற்றல் உபகரணங்கள், மாணவர்கள் கற்றல் திறன் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ததுடன், பள்ளி முதல்வர் உடன் கலந்துரையாடினார்.

கடந்த சில தினங்களாக அங்குள்ள பள்ளிகளில் ஆய்வை மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள கல்வி அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். பின்லாந்தின் சூழலியல் விவசாயம் மற்றும் அதை மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும் முறை ஆகியவை குறித்து அறிந்துகொள்ள விரும்பிய அமைச்சர் செங்கோட்டையன், பின்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள வேளாண்மைப் பண்ணைக்குச் சென்று, ஆய்வுகளை மேற்கொண்டார்.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூழலில், அமைச்சர் செங்கோட்டையன் கல்வி முறைகள் குறித்து ஆராய, பின்லாந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in