

திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் செல்ல தமிழர்கள் வடிகால் வசதி ஏற்படுத்தியது தெரியவந்தது.
கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது.
இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிகளவில் சுவர்களும் கிடைத்தன.
கடந்த வாரம் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குழிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பழமையான சுவர்கள் சேதமடைந்தன. குழிகளில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது.
நேற்று முருகேசன் என்பவரது நிலத்தில் செங்கலால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கிடைத்துள்ளது. நேற்று நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் செல்ல தமிழர்கள் வடிகால் வசதி ஏற்படுத்தியது தெரியவந்தது.