

கைது நடவடிக்கையில் சிபிஐ நடந்துள்ளது இதுவரை என் சர்வீசில் நான் பார்க்காத ஒன்று லோக்கல் போலீஸார்தான் இப்படி நடப்பார்கள் சிபிஐயிடம் நான் எதிர்ப்பார்க்கவில்லை என முன்னால் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்ச நீதிமன்றத்திலும் உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் சிதம்பரம் இன்று இரவு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அவருடன் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், வழக்கறிஞர்களும் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.
பின்னர் தனது டெல்லி இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்ற அவரை பின் தொடர்ந்து சென்ற சிபிஐ , அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த நடவடிக்கைக் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் இந்த கைது நடவடிக்கைக்கு ஆச்சர்யம் தெரிவித்தார். “என்னுடைய சிபிஐ சர்வீசில் எத்தனையோ வழக்குகளை பார்த்துள்ளேன் முன் ஜாமீன் வழக்கில் 3 நாள் அவகாசம் என்ற நிலையில் இவ்வாறு கைது செய்ய மாட்டார்கள்.
சம்மன் கொடுத்து அவர் ஆஜராகி வந்தார், இரண்டு ஆண்டுகள் ஆஜரானவர் 2 மணி நேரத்தில் ஓடிவிட மாட்டார், இதுபோன்ற நடவடிக்கையை சிபிஐ எந்த காலத்திலும் செய்ததில்லை. இந்திரா காந்தியை கைது செய்தபோதுகூட இப்படி நடந்ததில்லை.
அவரை கைது செய்யும்போது அவருக்கு பெயில் வழங்க சிபிஐ முன்வந்தது, ஆனால் சஞ்சய் காந்தி நீங்கள் வந்தது கைது செய்யத்தானே கைது செய்யுங்கள் என வற்புறுத்தியதால் கைது செய்தோம்.
ஆனாலும் சிபிஐ நீதிமன்றத்தில் அவரது பெயிலுக்கு ஆட்சேபனை இன்றி அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் 3 நாள் அவகாசம் இருந்த நிலையில் சிபிஐ இவ்வளவு வேகமாக செயல்பட்டு கைது செய்துள்ளது நான் எதிர்பார்க்காத ஒன்று” என தெரிவித்தார்.