

நடிகர் சங்கத் தேர்தலில் தலையிட்டு, நீதிபதியிடம் தனிப்பட்ட முறையில் அணுகி வழக்கு குறித்துப் பேசியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். மீண்டும் அவர் ஜூலை 29-ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜூன் 22-ல் விசாரித்தார்.
அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாமென பொதுச் செயலாளர் வேட்பாளரான ஐசரி கணேஷும், வழக்கறிஞர் அனந்தராமன் ஆகியோரும் நீதிபதியை அணுகினர். இதுதொடர்பாக இருவர் மீதும் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஜூன் 22-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த அவமதிப்பு வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரினர்.
அதனையேற்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் இருவரும் மீண்டும் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.