

குக்கர் பறிமுதல்
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில், சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.9 லட்சம் மதிப்பிலான 500 குக்கர் பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் மல்லி பஜார் பகுதியில் மண்டல துணை வட்டாட்சியர் பாண்டீஸ்வரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிவகாசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.1,875 விற்பனை விலை குறிப்பிடப்பட்ட 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட 500 குக்கர் பெட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ராஜபாளையம் அருகே முகவூர் முத்துச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(25) என்பவரிடம் விசாரித்த போது, உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து ரூ.9,37,500 மதிப்புள்ள 500 குக்கர் பெட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை ஶ்ரீவில்லிபுத்தூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.