

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ திரவக் கழிவுகளை கையாளும் நடைமுறைகள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் இன்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ திரவக் கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் இல்லை. மருத்துவ திரவக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் சென்னை குடிநீர் வாரிய கழிவுநீர் குழாயில் நேரடியாக விடப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பிருப்பதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதே போன்று மருத்துவ திரவக் கழிவுகளை கழிவுநீர் குழாயில் விட்டுவிட வாய்ப்புள்ளது.
அதனால் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ திரவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், தற்போது எவ்வாறு மருத்துவ திரவக் கழிவுகள் கையாளப்படுகிறது என்று அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜரானார்.
மனுவை விசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், அனைத்து மருத்துவமனைகளிலும் தற்போது மருத்துவ திரவக் கழிவுகள் கையாளப்படும் விதம் குறித்து சுகாதாரத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.