

உத்திரமேரூர் வட்டம் அரசாணி மங்களம் கிராமத்தில் வசிக்கும் இருளர் இனத்தைக் சேர்ந்த ராஜேந்திரனின் மகள் மீனா(16). இவர் கிறிஸ்துவ அமைப்பின் மூலம் கன்னியாகுமரியை அடுத்த மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணிபுரிந்தார். மே7-ம் தேதி மீனா விஷம் குடித்து இறந்துவிட்டதாக உத்திரமேரூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீஸார் அவரது பெற்றோர் களிடம் தகவல் தெரிவித்து, அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத் தினர் பிரச்சினையில் தலையிட்டு, இதுதொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை சந்தேக மரணம் என போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் என்றும், இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ள வில்லை எனச் சொல்லப்படுகிறது.
இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தலையிட்டு, இருளர் இனப் பெண் மீனா மரணம் தொடர்பாக, முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், வாடா நல்லூரில் செயல்படும் கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகி ரேஸ்லின்மேரியை கைது செய்து விசாரிக்க வேண்டும், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள விடுதியை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வாடாநல்லூரில் உள்ள கிறிஸ்துவ அலுவலகத்தை முற்றுகையிடப்பட்டது.
தகவல் அறிந்து, உத்திரமேருர் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் அரிதாஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் கோட்டாட்சியர் சிவருத்ரய்யா உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.