Last Updated : 10 May, 2015 12:17 PM

 

Published : 10 May 2015 12:17 PM
Last Updated : 10 May 2015 12:17 PM

வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் பழத்தோட்டம்: வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள்

வானம் பார்த்த பூமியான ராமநாத புரம் மாவட்டத்தில் பழத்தோட் டங்கள் அமைத்து வளமான பூமி யாக மாற்றி நல்ல விளைச்சல் கண்டுள்ளனர் பஞ்சாப் விவசாயி கள்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ளது லாந்தை ஊராட்சி. ராமநாதபுரத்தில் இருந்து பார்த்திபனூர் சென்று, அங்கிருந்து அபிராமம் என மாறிமாறி பேருந்து பயணம். அபிராமத்தில் இருந்து லாந்தை கிராமத்துக்கு பேருந்து கள் இல்லாததால் ஷேர் ஆட்டோ வில் சாலையின் இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சீமை கருவேலம் மரங்கள் சூழ்ந் திருப்பதை பார்த்தவாறு, லாந்தை ஊராட்சியை நெருங்கியதும் முற்றிலும் புதிய உலகில் நுழைந் ததைப்போல வரவேற்கிறது பஞ்சாப் விவசாயிகளின் அகல் சேவா பழத்தோட்டம்.

பழத்தோட்டத்தில் நுழைந்ததும் 66 வயதான சரப்ஜி சிங் கையில் இருந்த மண்வெட்டியை முந்திரி மரம் அருகே வைத்துவிட்டு அழகிய தமிழில் வணக்கம் கூறி வரவேற் றார். `ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்க... தாகமாக இருக்கும்… முதலில் தோட்டத்து முந்திரி பழம் சாப்பிடு... பொறுமையாக பேசுவோம்’ என்று உபசரித்துவிட்டு பேசத் தொடங்கினார்.

`மொத்தம் 300 ஏக்கர் நிலம். இதில் பஞ்சாபை சேர்ந்த 20 பேர் விவசாயம் செய்றோம். மாம்பழம், பலாப்பழம், கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீதா, மாதுளை, எலுமிச்சை, ஈச்சம்பழம், பப்பாளி என இப்பகுதியில் நன்கு வளரக்கூடிய வகைகளை தேர்ந்தெடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வருகி றோம்.

இது தவிர தர்ப்பூசணி, வெள்ளரி எனப் பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர்களையும் வளர்க்கிறோம் என மூச்சு விடாமல் பேசிக்கொண்டே, தோட்டங்களை சுற்றிக் காட்டினார் சரப்ஜி சிங்.

ஒரு கி.மீ. நடந்த பின்னர், டிராக்டரில் இருந்து இறங்கி வந்து வரவேற்ற 60 வயதான தர்சன் சிங், 'ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்துக்கு நானும், நண்பர் மன்மோகன் சிங்கும் முதலில் வந்தோம். இந்த இடம் முழுவதும் கருவேலம் மரங்களாக அப்போது இருந்தது. ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சுத்தம் செய்யவே 3 மாதம் ஆயிடுச்சு. ஆரம்பத்தில் உள்ளூர் கிராம மக்கள் கருவேல மரங்களை அகற்றி விட்டு சிங்குகள் என்ன செய்யப் போறாங்கன்னு கேலியாக பேசினர்.

கொஞ்சம் கொஞ்சமா மரங்கள் வளர ஆரம்பிச்சு போன வருஷம் மாம்பழம் 6 டன், கொய்யா 3 டன், பப்பாளி, பலாப்பழம், முந்திரி ஆகியவை 5 டன் என்று உற்பத்தி செய்த பழங்களை ஏற்றுமதி செய்தோம்.

பின்பு உள்ளூர் கிராம மக்கள் தங்களோட நிலங்களில் உளுந்து, மிளகாய், கடலைன்னு நம்பிக்கை யோட விவசாயம் செய்ய ஆரம் பிச்சிருக்காங்க. இப்ப எங்கள் தோட்டத்தில் பத்து உள்ளூர் விவசாயிகளுக்கும் வேலை கொடுத் திருக்கிறோம்’ என்றார்.

பஞ்சாப் விவசாயத்துக்கு பெயர் பெற்ற மாநிலம். இருந்தும் தமிழகத் தில் மிகவும் வறட்சியான ராமநாதபு ரத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு தர்சன் சிங் மீண்டும் பேசத் தொடங்கினார்.

பஞ்சாபில் ஒரு ஏக்கர் விவ சாய நிலம் குறைந்தது ரூ. 20 லட் சத்தில் இருந்து ஆரம்பிக்கும். இங்கே அதே விலையில் 100 ஏக்கர் நிலம் வாங்க முடியும். பழத்தோட்டத்துக்கு தேவையான தண்ணீரை கிணறுகள் அமைத்து, அதில் இருந்து சொட்டுநீர் பாசன முறைகளை பயன்படுத்துறோம். கிடைக்கும் மழை நீரை குளம் அமைத்தும் சேகரித்துக் கொள் வோம். மண்ணில் வறட்சி என்று எதுவும் கிடையாது. பாலைவன மாகவே இருந்தாலும் அங்கேயும் சில தாவரங்களும், மரங்களும் வளரும். வறட்சி நம் மனதில்தான் இருக்கக்கூடாது என அர்த்தமாய் சிரித்தார் தர்சன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x