

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "கோயம்புத்தூர் மாவட்டம், மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சு.லட்சுமணன் 25.4.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை பெருநகர காவல், திருவான்மியூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த க்ஷ.மாசிலாமணி 26.4.2015 அன்று மாரடைப்பால் காலமானார்.
சென்னை பெருநகர காவல், கொரட்டூர் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சிலோர்மணி 26.4.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ரகுநாதன் 27.4.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஞ.ராஜசேகர் 29.4.2015 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஜடையம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர மரத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த பொருட்செல்வம் 30.4.2015 அன்று மாரடைப்பால் காலமானார்.
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில், இரண்டாம் நிலை காவலராகப் பணி புரிந்து வந்த சு.நிர்மலா 3.5.2015 அன்று திருச்சிராப்பள்ளி – பெரம்பலூர் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் லட்சுமணன், மாசிலாமணி, சிலோர்மணி, ரகுநாதன், ராஜசேகர், பொருட்செல்வம், இரண்டாம் நிலைக் காவலர் நிர்மலா ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர்களது குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.