

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சிறந்த கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கு வசதியாக, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பாக 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வைரம்சந்தோஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரியின் தரத்தை தெரிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு பொறியியல் கல்லூரி களிலும் நடப்பு ஆண்டில் பயின்ற மாணவர்களின் மதிப்பீட்டு விவரங்களை, அண்ணா பல்கலைக்கழகம் தனது இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
பொறியியல் கல்லூரிகளின் மதிப்பீடு விவரங்களை இணையதளத்தில் வெளியிட பல்கலைக்கழகம் மறுத்து வருவதில் உள்நோக்கம் உள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்டதால் கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளின் மதிப்பீட்டினை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இந்த ஆண்டு இதுவரை வெளியிடவில்லை.
எனவே, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆகிய விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணைய தளத்தில் உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.சொக்கலிங்கம் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கல்லூரி குறித்த மதிப்பீடு மற்றும் தரப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட மனுதாரர் அனுப்பிய மனுவை பரிசீலித்து அண்ணா பல்கலைக்கழகம் 2 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.