வேலைக்காக சவுதி அரேபியா சென்ற மதுரை இன்ஜினீயர் திடீர் மாயம்: மகனை மீட்கப் போராடும் தந்தை

வேலைக்காக சவுதி அரேபியா சென்ற மதுரை இன்ஜினீயர் திடீர் மாயம்: மகனை மீட்கப் போராடும் தந்தை
Updated on
1 min read

சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற பொறியியல் பட்டதாரி இளைஞர், திடீரென காணாமல் போயுள்ளார். மகனை மீட்க அவரது தந்தை போராடி வருகிறார்.

மதுரையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பூமிநாதன் (33). எம்.இ. பட்டதாரியான இவர், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 20-ம் தேதியில் இருந்து அவர் திடீரென மாயமானார். இதுகுறித்து ‘தி இந்து’விடம் பூமிநாதனின் தந்தை ராஜேந்திரன் கூறியதாவது:

என் மகன், சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். அந்த நிறுவனத்தின் தலைமை அலு வலகத்தில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மருத்துமனையில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. சவுதிக்கு சென்ற சில நாட்களிலேயே, அங்கு ஓய்வில்லாமல் வேலை வாங்குவதாகவும் ஏதாவது கேட்டால் மிரட்டுவதாகவும் தொலைபேசியில் எனது மகன் தெரிவித்தார். உடனே திரும்பி வந்து விடுமாறு கூறினேன். ஆனால், அதற்கு அந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு எனது மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. நிறுவன அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘உங்கள் மகன் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை’ என்று பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கின்றனர்.

எனவே, சவுதி அரேபியாவுக்கு சென்று மகனை அழைத்துவர முடிவு செய்துள்ளேன். அதற்காக பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உதவியை நாடினேன். அவர் மூலம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமனையும், வெளியுறவுத் துறை அதிகாரிகளையும் சந்தித்தேன். விசா பெற்றுத் தருவதாக வெளியுறவுத் துறை செயலாளர் உறுதி அளித்தார்.

இன்னும் ஓரிரு நாளில் சவுதி அரேபியா செல்ல இருக்கிறேன். எனது மகனை மீட்க தமிழக அரசும் உதவ வேண்டும்.இவ்வாறு ராஜேந்திரன் கண்ணீருடன் கூறினார். இதற்கிடையே அவருக்கு நேற்று விசா கிடைத்துள்ளது. தனது மகனை அழைத்து வருவதற்காக இன்று அவர் சவுதி செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in