

இந்தியாவில் குறைந்த அளவு கடன் பெற்றுள்ள நான்கு மாநிலங்களில் தமிழகம் ஒன்றாக உள்ளது. கடனால் திவாலாகும் நிலை அரசுக்கு ஒருபோதும் ஏற்படாது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழக அரசின் பொதுக்கடன் நிலை குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''2011 முதல் தற்போது வரை கடன் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடன் பெறுகிறபோது அநியாயமாக வட்டி செலுத்தி கடன் பெறவில்லை. ஒரு மாநிலத்தின் கடன் அளவு வரம்பான 25 சதவிகிதத்திற்குள்தான் இருக்கிறது.
கடன் வரம்புக்குள் உள்ளதால் திவாலாகும் நிலை இந்த அரசுக்கு ஒருபோதும் ஏற்படாது. 2011ல் இருந்ததை விட 2015ல் வரிவருவாய் ரூ.36,565 கோடி அதிகரித்து உள்ளது. வரிவருவாய் உயர்வால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது.
பெறப்பட்ட கடன் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாகவே பயன்படுத்தப்பட்டது. ரிசர்வ் வங்கியின் ஆய்வு அறிக்கையின்படி இந்தியாவில் குறைந்த அளவு கடன் பெற்றுள்ள நான்கு மாநிலங்களில் தமிழகம் ஒன்றாக உள்ளது'' என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.