

உணவு, உடை, உறைவிடம் எனும் அடிப்படை தேவைகளின் பட்டியலில் இடம்பிடிக்காதது மட்டும்தான் முகநூலுக்கு குறை. அந்த அளவுக்கு சிறியவர்கள் முதல் வயோதிகர்கள் வரை முகநூல், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதன் மூலம் சில நல்ல விஷயங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள் ஒன்றிணைந்து விதைத்த ஒரு விதை இன்று விருட்சகமாக வளர்ந்து நிற்கிறது. செல்பேசி கேமராக்களின் ஆதிக்கம் வேரூன்றிய பின்பு தொழில் ரீதியிலான புகைப்பட கலைஞர்களையும் தாண்டி பெரும்பாலானோருக்கு புகைப்பட கலையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இயற்கை காட்சிகள், வித்யாசமான நிகழ்வுகள் என புகைப்பட கலையில் சாமானிய மக்களும் சாதனை படைக்கின்றனர். அதிலும் தற்போது செல்பி புகைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. முகநூலில் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை பதிவு செய்து அதற்கு எத்தனை பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள், எத்தனை பேர் பகிர்கிறார்கள் என பார்ப்பது அலாதியான சுகம்.
அந்த வகையில் முகநூலில் புகைப்படங்களை பதிவு செய்வதற் கென்றே >‘புகைப்பட பிரியன்’ என்ற பெயரில் ஒரு குழுவை தொடங்கினார் நாகர்கோவிலை சேர்ந்த மெர்வின் ஆன்றோ. இந்த குழுவில் ஏறக்குறைய 18,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த குழு சார்பில் தமிழகம், புதுச்சேரி அளவிலான புகைப்படக் கண்காட்சி நாகர்கோவிலில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. 60 புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து நாகர்கோவிலை சேர்ந்த ஜவஹர் கூறும்போது, ‘புகைப்பட பிரியன் குழுமத்தில் மட்டும் 13 குழுக்கள் உள்ளன. இதில் பறவைகள், தெருவோர படங்கள் என ஒவ்வொரு அம்சத்துக்கும் தனித்தனியாக குழு அமைத்து பங்கேற்பாளர்களுக்கு களம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
குழு சார்பில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தீம் கொடுக்கப்படும். அந்த தீமிற்கு ஏற்றவாறு பங்கேற்பாளர்கள் புகைப்படம் எடுத்து அனுப்புவர். இதுதவிர ‘போட்டா ஆப் தி டே’ என்ற பெயரில் தினந்தோறும் குழுமத்தில் பதிவு செய்யப்படும் படங்களில் சிறந்த ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும்’ என்றார் அவர்.
கண்காட்சியில் புதுச்சேரியை சேர்ந்த விஷால் முதல் பரிசும், நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம்துறையை சேர்ந்த அலெக்ஸ் ஆல்ரிக்ஸ் 2-ம் பரிசும், புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீகாந்த் 3-ம் பரிசும் பெற்றனர்.