பள்ளி வாகனங்களில் விரைவில் ஆய்வுப் பணிகள்

பள்ளி வாகனங்களில் விரைவில் ஆய்வுப் பணிகள்
Updated on
1 min read

தமிழகத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை விபத்தில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து இதில் ஆய்வு நடத்தப்படும். இந்த ஆண்டில் இதுபோன்ற ஆய்வை மேற்கொள்ள விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

ஆய்வு நடத்த எத்தனை குழுக்கள், எந்தெந்த தேதிகளில் ஆய்வு மேற்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பள்ளிகளில் தேர்வு முடிந்த பின்னர் ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு ஜூன் மாதம் வரையில் ஆய்வு நடத்தப்படும்.

ஆய்வின் போது, வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் தகுதிச் சான்று (எப்.சி) அளிக்கப்படாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in