

சென்னை: மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை டெண்டர்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடியில் 35 நடைபாதைகளை சீரமைக்கும் டெண்டர்கள் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, இந்த டெண்டர்களைரத்து செய்துள்ளது.
திட்டச் செலவு செயற்கையாக அதிகரிக்கப்பட்டது, சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர் விதிகள் உருவாக்கப்பட்டது போன்ற காரணங்களால், அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கக் கூடாது. ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அப்போது அவர்களுக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவளித்திருந்தார். இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளில் திடக் கழிவு அகற்றம் மற்றும் கொண்டு செல்லும் பணிகளை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக 3 தொகுப்புகளாக சுமார் ரூ.4 கோடியில் டெண்டர் கோரப்பட்டது.
இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில், விஜய், தூய்மைப் பணியாளர்களுக்காக செய்த பதிவை டேக் செய்து, தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.